Monday, August 12, 2013

இந்திய சுதந்திரம் 66

இந்திய சுதந்திரம் 66






இந்திய நாடு ஆளுமை
ஆட்சி கை மாறியது
66 ஆண்டுகளுக்கு முன்பு

வெள்ளையர்களின் கையிலிருந்து
நம் நாட்டு கொள்ளையர்களின்
கைகளுக்கு அதிகாரம் வந்து சேர்ந்தது

நாட்டில் தேனும் பாலும் ஓடும் என்று
கனவு கண்டனர் நாட்டு மக்கள்

நம்மை ஆளுபவர்களை நாமே
தேர்ந்தெடுப்போம் அவர்கள் நமக்கு
நல்லது செய்வார்கள் என்று நம்பியே
66 ஆண்டுகள் ஓட்டிவிட்டோம்

வறுமை ஒழியும் வறுமை ஒழியும் என்று
பொறுமையாக காத்திருந்தது
ஏமாந்த மக்கள் கூட்டம்.

வறுமையும் ஒழியவில்லை
வாழ்வும் மேம்படவில்லை
எதற்கெடுத்தாலும் வரி
எதை செய்தாலும் வரி. எதுவும் செய்யாமல்
இருந்தாலும் வரி. பேசினாலும் வரி
பேசாவிட்டாலும் வரி.

கொடுப்பதுபோல் கொடுத்து மீண்டும் பலமடங்கு
மக்களிடமே பிடுங்கி தின்கிறது ஆளும் வர்க்கம்

எதற்கெடுத்தாலும் அனுமதி பெறுவதற்கே
பல ஆண்டுகள் அலைகழிப்பு.
எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம்
மக்கள் மனதிலே வஞ்சம்
எங்கு பார்த்தாலும் பஞ்சம்

நாட்டு வளங்கள் சுரண்டப்படுகின்றன
தெளிந்த நீரோடை போல் ஓடிய ஆறுகள்
அழுக்காறாய்  நாற்றமடித்து கொண்டிருக்கின்றன.

இலவசங்களை கொடுத்து வாக்கு சீட்டை
பெறுகின்றார் ஏமாந்த மக்களிடம்
ஐந்து ஆண்டுகள் நாட்டை சுரண்ட

உள்ளூர் வங்கியில் காசை வைத்தால்
காரணம் கேட்கின்றான், கணக்கு கேட்கின்றான் என்று
அந்நிய நாட்டு வங்கிகளில் போட்டு வைக்கிறார்
பத்திரமாக கொள்ளைஅடித்த  பணத்தை

கோடிக்கணக்கான மக்களுக்கு வீடில்லை,
வாசல் இல்லை கல்வி இல்லை, மருத்துவ வசதி இல்லை
உழைக்க தொழில் இல்லை ,உழைத்தாலும்
குறைந்த பட்ச ஊதியமுமில்லை ,
ஏன் எதிர்காலமே இல்லை இந்நாட்டில்

அக்கிரமத்தை எதிர்த்தால் அடியும் உதையும்
அடங்கி போனாலும் வலியும்  வேதனையும்
ஊழலை எதிர்ப்போர் காணாமல் போவார்
அவர்களின் குடும்பம் வீணாகி போகும்.

நாட்டில் யாருக்கும் யாராலும் பாதுகாப்பில்லை
ஆனால் ஆளுபவர்களுக்கு மட்டும் ஆயுதமேந்திய
வீரர்களில் பாதுகாப்பு உண்டு

நாட்டு எல்லைகளிலும் பாதுகாப்பில்லை
நம்மை காப்பாற்ற நின்றுகொண்டிருக்கும்
சிப்பாய்களுக்கும் கூட.

எங்கு வேண்டுமானாலும் எச்சில்,துப்ப, மலஜலம் கழிக்க,குப்பை போட பொது சொத்துக்களை எந்த காரணமுமின்றி நாசம் செய்ய ,கோடிக்கணக்கில் மக்களை ஏமாற்றிவிட்டு ஓடிவிட, லஞ்சம் வாங்க , பொது சொத்துக்களை ஆக்கிரமிக்க,இயற்க்கை வளங்களை சுரண்ட சுதந்திரம் உண்டு.

நேர்மையாக வாழ சுதந்திரம்  கிடையாது இந்நாட்டில்.
கேடிகளாய்   வாழலாம்
கோடிகளை  அள்ளலாம்   இந்த நாட்டில்.

சுதந்திர தினம் கொண்டாடுவோம். மூவர்ண கொடி
கையில் ஏந்தி -பொது இடங்களில் கொடி  ஏத்தி
ஆடுவோமே பள்ளு  பாடுவோமே என்று  பாடிவிட்டு
அரசு மது கடைகளில் கள்ளும்  சாராயமும்
குடிப்போர் குடித்து எல்லாவற்றையும் மறந்து மகிழட்டும்

மற்றவர்கள் தொலை காட்சி பெட்டிக்குள் முகத்தை
புதைத்துக் கொள்ளட்டும்.

இவ்வளவு இருந்தும் வாழ்க சுதந்திரம்
ஏனென்றால் சர்வாதிகாரம் மிக கொடியது. 

4 comments:

  1. Replies
    1. பொறுமை கடலினும் பெரிது.
      அந்த கடல் மேல் துயிலும் கடவுள் நல்லவர்களை
      காப்பாற்றுவார் கைவிடாமல்

      Delete
  2. மாணவர்கள்
    தொலைக் காட்சிப்
    பெட்டிகளிலும்

    இளைஞர்கள்
    மதுக் கடைகளிலும்

    அடைக்கலமாகி வருவது
    வேதனை ஐயா.
    தேவை இன்னொரு சுதந்திரம்

    ReplyDelete
    Replies
    1. வேண்டிய அளவு சுதந்திரம் இருக்கிறது
      .இது போதும்

      அதை எப்படி பயன்படுத்தவேண்டும்
      என்று வளர்த்தவர்கள் சொல்லிக்கொடுக்க
      தவறிவிட்டதின் விளைவுதான்
      இன்று நாம் காணும் அலங்கோலம்.

      அவரவர் பட்டு திருந்தட்டும்.

      Delete